உங்களது புராணக் கற்பனைக் கண்ணால், சிசிபஸைப் (Sisyphus) பாருங்கள். அவர் ஒரு பெரிய பாறாங்கல்லைக் செங்குத்தான மலையின் உச்சியில் உருட்டிச் செல்லப் பாடுபடுவதைப் பாருங்கள்; ஆனால், உச்சியை அடைவதற்குச் சற்று முன்பாகவே, அந்தப் பாறை மலையிலிருந்து மீண்டும் கீழே உருண்டு விழுகிறது. உடனடியாக, அவர் மீண்டும் அதே முடிவோடு முயற்சி செய்கிறார்.
கதை சொல்வது போல், சிசிபஸ் இந்தச் சோகமான சூழ்நிலையை நித்திய காலத்திற்கும் மீண்டும் மீண்டும் வாழ விதிக்கப்பட்டவர். வெற்றியின் விளிம்பில் இருந்து மீண்டும், மீண்டும், மீண்டும் தோற்றுப்போவது எவ்வளவு வெறியூட்டும் காரியம்!
பிரசங்கம் செய்வதும் அதைப்போலவே தோன்றலாம். ஒவ்வொரு வாரமும், நீங்கள் பாறையை மலையின் மீது தள்ளுகிறீர்கள், ஜெபித்தும், ஆயத்தப்பட்டும், உங்கள் முழு பலத்தோடும் பிரசங்கித்தும், நீங்கள் உச்சியை அடையவே இல்லை என்று உணர்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் “நன்றாக இருந்தது”, “அது மிகவும் உதவியாக இருந்தது” மற்றும் “நீங்கள் செய்வதற்கெல்லாம் நன்றி” போன்ற வார்த்தைகளைக் கேட்கலாம். ஆனால் சில விஷயங்களைக் கவனிக்காமல் இருக்க உங்களால் முடியாது:
- அவிசுவாசிகள் தொடர்ந்து திருச்சபைக்கு வருகிறார்கள், ஆனால் சுவிசேஷத்தால் பாதிக்கப்படாதது போல் தோன்றும்.
- பல திருச்சபை உறுப்பினர்கள் அரைகுறை ஈடுபாட்டுடனேயே இருக்கிறார்கள்.
- சிலர் பல வருடங்களாகத் தங்களிடம் இருக்கும் அதே பாவங்களுடன் போராடுகிறார்கள்.
- திருமண உறவுகள் முறிந்து போகின்றன.
- திருச்சபையில் வளர்ந்த பிள்ளைகள் விசுவாசத்தை விட்டு விலகிச் செல்கிறார்கள்.
- நீங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள்.
- ஜெபக் கூட்டங்களில் வருகை குறைவாக உள்ளது.
- சுவிசேஷ வைராக்கியம் மிகக் குறைவாகவே உள்ளது.
- திருச்சபையின் ஊழியத் தாக்கம் அற்பமானதாகவே தோன்றுகிறது.
- உலகம் தொடர்ந்து அதிக உலகத்தனமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
உங்கள் பிரசங்கம் எதையும் மாற்றாதது போல் தோன்றலாம். பாறை மலையின் அடிவாரத்திற்கே மீண்டும் உருண்டு கொண்டிருக்கிறது.
சிசிபியன் பொய் (The Sisyphean Lie)
ஆனால் இது உண்மையதானா? உண்மையில் எதுவும் மாறவில்லையா? நமது பிரசங்கம் “காலத்திற்குப் புறம்பாக” (2 தீமோ. 4:2) இருந்தாலும், தேவனுடைய வார்த்தையின் உண்மையுள்ள பிரசங்கத்தின் மூலம் தேவன் எப்போதும் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஏசாயா தனது ஊழியத்தில் குறைந்த கனிகளையே கண்டார், இருப்பினும் வார்த்தை வெறுமையாகத் திரும்பாமல், தேவன் எதற்காக அதை அனுப்பினாரோ அதை நிறைவேற்றும் என்று தேவன் அவருக்கு உறுதியளித்தார் (ஏசாயா 55:11). நாம் உணரும் உணர்வுகளையும் மீறி, நாம் பிரசங்கிக்கும்போது எதுவும் மாறவில்லை என்பது முற்றிலும் உண்மையல்ல.
அநேகமாக, பிரச்சனை என்னவென்றால், நாம் படிப்படியான மற்றும் நுட்பமான முடிவுகளைத் தேடாமல், உடனடி மற்றும் வெளிப்படையான முடிவுகளைத் தேடுகிறோம். தேவன் வானவேடிக்கைகளை வெடிக்கச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் அவர் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார். விதையைத் தெளித்துவிட்டுத் தூங்கச் செல்லுங்கள் என்று இயேசு சொன்னார். நடுங்கள், தண்ணீர் ஊற்றுங்கள் என்று பவுல் சொன்னார். ஏற்ற காலத்தில், தேவனே விளையச் செய்வார் (ஒப்பிடுக: மாற்கு 4:26–29, 1 கொரி. 3:6–8). வார்த்தையின் பிரசங்கத்தின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்பது ஒரு தோட்டம் வளர்வதைப் பார்ப்பதைப் போன்றது.
உங்கள் சொந்த வளர்ச்சியின் பாதையை ஆராய்ந்து தைரியமடையுங்கள். உங்களது காலவரிசை விரைவான மாற்றத்தின் தருணங்களால் குறிக்கப்பட்டிருக்கலாம்—அந்த தருணங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்! இருப்பினும், பொதுவாக, உங்கள் மறுரூபமாக்கம் மெதுவாகவே நடந்துள்ளது என்று நீங்கள் சாட்சி கூறுவீர்கள். நீங்கள் பிரசங்கிக்கும் மக்களுக்கு இது ஏதேனும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ரே ஓர்ட்லண்ட் (Ray Ortlund) அவர்களின் வார்த்தைகளில், மக்கள் “தங்கள் வாழ்க்கையை ஆழமான மட்டத்தில் மறுபரிசீலனை செய்ய காலம் எடுக்கும், ஏனெனில் மனிதர்கள் சிக்கலானவர்கள் மற்றும் மாறுவது எளிதானது அல்ல.”1 தேவன் வழக்கமாகத் தம்முடைய மக்களைத் தம்முடைய வார்த்தையின் மூலம் நிமிடங்களிலோ அல்லது வினாடிகளிலோ அல்ல, மாறாக ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களிலேயே உருவாக்குகிறார் மற்றும் மறுசீரமைக்கிறார். இத்தகைய மெதுவான மாற்றம் நமக்கு சோர்வையளிக்கலாம், ஆனால் ஆயிரம் ஆண்டுகளை ஒரு நாளாகக் கருதும் அவருக்கு அல்ல. உங்களது பிரசங்கத்தின் முடிவுகள் பிரமாண்டமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களது பிரயாசனம் வீணானதல்ல. நீங்கள் சிசிபஸ் அல்ல.
எங்கு பார்க்க வேண்டும்
இருப்பினும், வெளிப்படையான மாற்றம் இல்லாதது மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும். ஒரு போதகர் தனது சிறந்த முறையில் பிரசங்கித்தும் கனியைக் காணாதபோது என்ன செய்ய வேண்டும்? சுற்றிலும் பார்க்கவும், மேலே பார்க்கவும், முன்னோக்கிப் பார்க்கவும் நான் பரிந்துரைக்கிறேன்.
இருக்கும் கனிகளுக்காகச் சுற்றிலும் பாருங்கள்
நீங்கள் கனிகளைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறீர்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அந்த வயதான விசுவாசி விசுவாசத்தில் நிலைத்திருக்கிறாரா? அந்த புதிய கிறிஸ்தவர் சமூக விலையைக் கொடுத்தாவது இயேசுவைப் பின்பற்றுகிறாரா? அந்த பிரம்மச்சாரி வாலிபன் ஊழியம் செய்வதற்கான வழிகளைத் தேடுகிறானா? அந்த தாய் தன் குடும்பத்தைப் பராமரிப்பதில் திருப்தியுடன் இருக்கிறாளா? அந்த வாலிபர் மிஷனரி வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கிறாரா? தேவனுடைய வார்த்தையின் பிரசங்கம் இதற்குப் பங்களித்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
கனி எளிமையானதாக இருப்பதால் மட்டுமே அது முக்கியமற்றது என்று அர்த்தமல்ல. மக்களின் வாழ்க்கையில் தேவனுடைய எளிய கிரியைகளுக்காக உங்கள் கண்களைத் திறங்கள்.
பிரசங்கிக்கும்போது மேலே தேவனைப் பாருங்கள்
கனிதரும் தன்மையைப் பற்றிக் கவலைப்படுவது சரியே. தேவன் நமது பிரசங்கத்தைப் பயன்படுத்தி இரட்சிக்கவும் பரிசுத்தப்படுத்தவும் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இருப்பினும், கனியைப் பொருட்படுத்தாமல், நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தீர்கள் என்பதை அறிந்து திருப்தியடையலாம். “தக்க காலத்தில் தன் வீட்டாராகிய வேலைக்காரருக்கு உணவுகொடுத்து, அவர்களைக் கண்காணிக்கும்படி எஜமான் ஏற்படுத்தின உண்மையுள்ளவனும் விவேகமுள்ளவனுமான ஊழியக்காரன் யார்?” என்று இயேசு ஒருமுறை கேட்டார்; “எஜமான் வரும்போது, அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்” (மத். 24:45–46).
உண்மையுள்ள பிரசங்கத்தில் முன்னேறிச் செல்லுங்கள்—மக்களுக்குத் தக்க காலத்தில் உணவளியுங்கள்—முடிவுகளை தேவனிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் இறுதியாக தேவனுக்கு முன்பாகக் “கிறிஸ்துவுக்குள் பேசுகிறீர்கள்” என்பதை நினைவில் கொள்ளுங்கள் (2 கொரி. 2:17), எனவே “மனிதர்களுக்கு அல்ல, கர்த்தருக்கே ஊழியஞ்செய்வதுபோல” நல்ல மனதுடனே ஊழியஞ்செய்யுங்கள் (எபே. 6:7).
கர்த்தருடையநாளை நோக்கி முன்னோக்கிப் பாருங்கள்
தற்போது, உங்கள் பிரசங்கத்தின் மூலம் தேவன் செய்யும் அனைத்து மறைமுகமான கிரியைகளையும் உங்களால் ஊகிக்க முடியாது. ஆனால் நித்தியத்தின் முதல் வெளிச்சத்தில் “அவனவனுடைய கிரியை வெளிப்படும்; அந்த நாள் அதை விளக்கும்” (1 கொரி. 3:13). அந்நாளில், கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்த உலகில் தேவன் உங்களை எந்தளவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இருட்டில் புல் வெட்டுதல்
அந்திப் பொழுதில் என்றாவது உங்கள் வீட்டின் புல்வெளியை வெட்டியிருக்கிறீர்களா? வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வருகிறீர்கள், சூரியன் மறையும் நிலையில் இருக்கிறது, ஆனால் புல்லை வெட்டாமல் இன்னும் ஒரு நாள் கூட விட்டுவிட முடியாது. நீங்கள் புல் வெட்டும் இயந்திரத்தை இயக்கி வேலையில் இறங்குகிறீர்கள். மங்கிவரும் மாலை வெளிச்சத்தில், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்கள் என்பதைப் பார்ப்பது கடினம். உங்களது கோடுகள் நேராக இருக்கிறதா? எல்லாமே வெட்டப்படுகிறதா? நீங்கள் தவறவிட்ட ஒழுங்கற்ற பகுதிகள் ஏதேனும் இருக்குமா? உங்களால் முடிந்தவரை கவனமாகப் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது அமைதியாக இருங்கள். பகல் வெளிச்சம் வருகிறது, காலை நேரம் அனைத்தையும் வெளிப்படுத்தும். (வாசிக்கிறவன் சிந்திக்கட்டும்.)
உண்மையுடன் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே இருங்கள். இந்தத் தற்போதைய இருள் உங்களது பிரயாசத்தின் கனியை மறைக்கக்கூடும், ஆனால் சூரியன் உதிக்கப்போகிறது.
ஆசிரியர்: டேவிட் கிங், டிஎன் (TN), சட்டனூகாவில் (Chattanooga) உள்ள கான்கார்ட் பாப்டிஸ்ட் திருச்சபையின் (Concord Baptist Church) மூத்த போதகர் ஆவார்.