அவர்கள் அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான அங்கியைக் அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியை பின்னி, அதை அவருடைய சிரசின்மேல் வைத்து, அவருடைய வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைப் பரியாசம்பண்ணினார்கள். (மத்தேயு 27:28–29)
ரோமர்களைப் போல அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதில் வேறு எவரும் சிறந்து விளங்கவில்லை. மதில்கள் சூழ்ந்த நகரங்களை வென்றதைக் கொண்டாடக் கட்டப்பட்ட வெற்றி வளைவுகள் முதல் பேரரசர்களின் வழிபாடு வரை, ரோமாபுரி தனது ஏகாதிபத்திய அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் சுட்டிக்காட்டும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட்டதில்லை. தேசத்துரோகத்திற்காக ஒரு கைதியை மரணதண்டனைக்கு உட்படுத்துவதில் கூட அவர்கள் இதைத் தவறவிடவில்லை.
அன்று பிரைத்தோரியத்தில் (Praetorium) அப்படிப்பட்ட ஒரு மரணதண்டனைதான் நடந்து கொண்டிருந்தது. படைவீரர்கள் விஷயத்தை நன்கு அறிந்திருந்தார்கள். இயேசு தன்னை ராஜா என்று உரிமை கோரியிருந்தார், மேலும் இராயருக்கு எதிரான குற்றத்திற்காக மரிக்கவிருந்தார். அவருடைய உரிமைக்கோரலின் விசித்திரமான நகைச்சுவையை எடுத்துக்காட்டுவதற்காக, அவர்கள் அவருடன் ஒரு நாடகத்தை விளையாடினார்கள்; ராஜ அங்கி, கிரீடம் மற்றும் செங்கோலை அணிவித்து அவரை அலங்கரித்தார்கள். ஆனால் அந்த அங்கி ஒரு ரோம படைவீரனின் மேலங்கி, அது உண்மையில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது; செங்கோலோ ஒரு கரடுமுடரான மரக்கோல். அதை ஏந்தியவர்கள் படைவீரர்கள் மட்டுமே, அவர்கள் அவளுடைய சொந்தப் போலி அதிகாரத்தின் அடையாளத்தைக் கொண்டே அவரை அடித்தார்கள். இந்த கொடூரமான துஷ்பிரயோகம், உமிழ்நீர் மற்றும் பரியாசத்துடன் சேர்த்து, போலி ராஜாக்களுக்கு ரோமாபுரி அளித்த கனமாக இருந்தது.
ஒரு முள்முடி
ஆனால் அன்று அவர்கள் இயேசுவுக்குக் கொடுத்த கிரீடத்தைப் பற்றி இங்கே சிந்திக்க நான் விரும்புகிறேன். பண்டைய உலகம் முழுவதிலும், கிரீடங்கள் அரச குலத்தின் உலகளாவிய அடையாளமாக இருந்தன. இராயரே விலையுயர்ந்த உலோகத்தில் செய்யப்பட்ட லாரல் (Laurel) இலைகளால் பின்னப்பட்ட கிரீடத்தை அணிந்திருந்தார். அது வெற்றியின் மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாக இருந்தது. அதற்கு முரணான பரியாசமாக, இயேசுவின் கிரீடம் முட்களால் பின்னப்பட்டிருந்தது. சுவிசேஷப் பதிவுகளை வாசிக்கும் நவீன வாசகர்கள், வழக்கமாக இத்தகைய முட்கள் ஏற்படுத்திய வேதனையிலேயே கவனம் செலுத்துகிறார்கள்; நிச்சயமாக படைவீரர்கள் அவரை காயப்படுத்தவே நினைத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ஏற்கனவே அவரை வாரினால் அடித்திருந்தார்கள், மேலும் அவரை ஒரு சிலுவையில் ஆணியடிக்கப் போகிறார்கள். எனவே சரீரப் பிரகாரமான வலி மட்டுமே அவர்கள் மனதில் இருந்த ஒரே காரியமாகத் தெரியவில்லை. அவர்கள் அதற்கு மேலான ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்—ஒரு மனிதனின் சுயமரியாதையைக் குத்தி நிமிண்டிப் பார்க்கும் ஒரு வலி.
எனவே அவர்கள் முட்களைத் தேடி யாரையோ அனுப்பினார்கள். அவர் அதைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்திருக்கும். யாரும் முட்புதர்களைப் பயிரிடுவதில்லை, மேலும் அவர்கள் ஒரு நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு அரண்மனையின் நடுவில் இருந்தார்கள்.
மிகவும் மதிப்பற்ற இந்தத் தாவரத்தை அவர்கள் கண்டறிந்தபோது, அதன் கொடூரமான இலைகளை எடுத்து, மதிப்பற்ற உரிமைக்கோரல்களைக் கொண்ட மதிப்பற்ற ஒரு மனிதனைப் போலத் தோன்றியவருக்குக் கிரீடமாகச் சூட்டினார்கள்.
பொருத்தமான ஒரு கிரீடம்
உண்மையில், அந்தப் படைவீரர்கள் நினைத்த விதத்தில் இல்லாவிட்டாலும், இதைவிடப் பொருத்தமான ஒன்று இருந்திருக்க முடியாது. ஏனெனில் இயேசு ரோமின் அரியணையையோ அல்லது வேறு எந்த பேரரசின் அரியணையையோ உரிமை கோரவில்லை. இல்லை, அவருடைய உரிமைக்கோரல் முழு உலகத்தின் மீதும், அகில படைப்பின் மீதும் இருந்தது; அதற்கு முட்கள் மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
ஏன் முட்கள் மட்டுமே? அதைப் புரிந்துகொள்ள, நீங்கள் சற்று நின்று வேதாகமத்தில் உள்ள முட்களின் கதையைக் கேட்க வேண்டும். வேதாகமம் முழுவதும், முட்கள் வீண் (futility) மற்றும் வேதனைக்கான ஒரு அடையாளமாகவும் பழமொழியாகவும் இருக்கின்றன. தேவனுடைய ஆசீர்வாதம் எங்கே விலக்கிக் கொள்ளப்படுகிறதோ, அவருடைய சாபம் எங்கே காணப்படுகிறதோ, அங்கே முட்கள் பெருகுகின்றன. அவை பலனின்மை மற்றும் பாழடைதலின் ஒரு படமாகும். அவை நல்ல செடிகளை நெருக்கி மூச்சுத்திணறச் செய்கின்றன. அவை வழிப்போக்கனின் பாதையை மறிக்கின்றன. விரக்தி மற்றும் துன்பத்தின் ஊற்றாக இருக்கும் அவை, எரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அதில் ஆச்சரியமில்லை: அவற்றின் தோற்றம் படைப்பின் மூன்றாம் நாளில் பிற தாவரங்களோடு அல்ல, வீழ்ச்சியின் முதல் நாளில் நிகழ்ந்தது.
தேவன் உலகத்தைப் படைத்தபோது, அதை நல்லதாகப் படைத்தார். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உணவாக அனைத்து வகையான தாவரங்களையும் அவர் படைத்தார் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. தம்முடைய பரம ஆளுகையின் கீழ் மனிதகுலம் பிரதிநிதிகளாக (vice-regents) செயல்பட அவர் அவர்களைப் படைத்தார் என்றும் வேதாகமம் சொல்கிறது. அவர்கள் சுயாதீன அதிகாரிகளாக அல்லாமல், அவருக்குக் கீழ் உள்ள நிர்வாகிகளாக உலகை ஆள வேண்டியிருந்தது. ஆனால் நமது முதல் பெற்றோரும் பிரதிநிதிகளுமான ஆதாமும் ஏவாளும் தேவனுடைய அதிகாரத்தின்கீழ் ஆள திருப்தியடையவில்லை. அவருடைய பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவருடைய ஆட்சியை நடத்தவோ அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் தாங்களாகவே ராஜாவாகவும் ராணியாகவும் இருக்க விரும்பினார்கள்; தங்களுக்குத் தாங்களே தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், தங்களுக்குத் தாங்களே முடிவெடுக்கவும் விரும்பினார்கள். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாது என்ற அவருடைய கட்டளையை அவர்கள் நிராகரித்தார்கள். அதுவே தங்களுக்கு மிகவும் தேவையான கனி என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். எனவே அவர்கள் கையை நீட்டி அதை எடுத்தார்கள்.
அன்றிலிருந்து நாம் அனைவரும் அதையே செய்து வருகிறோம். நாம் நமது சொந்த விதிகளை உருவாக்குகிறோம். வாழ்க்கைக்கு நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதையே நமது அர்த்தமாக நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். நமது பேரரசுகள் பெரியவை அல்ல. ஆதாமைப் போலவும் ஏவாளைப் போலவும், நாம் உலகத்தின் ஆட்சியாளர்கள் என்று உரிமை கோருவதில்லை. நமக்கு நாமே ஆட்சியாளர்கள். ஆனால் நமது ஆட்சி எங்கு ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கே இராயரைப் போல நாமும் எதிரிகளைப் பொறுத்துக் கொள்வதில்லை.
ஆதாம் மற்றும் ஏவாளின் கிளர்ச்சிக்கு பதிலளிப்பாக, தான் உருவாக்கிய வளமான மற்றும் ஜீவனளிக்கும் உலகத்தை தேவன் சபித்தார். நிலத்திலிருந்து ஒரு புதிய காரியம் தோன்றியது. ஆதாமின் வேதனையான உழைப்புக்குப் பதிலாக, தேவன் ஏற்கனவே உருவாக்கிய நல்ல தாவரங்களுடன் கூடுதலாக, நிலம் இப்போது முட்களையும் குறுக்குகளையும் முளைப்பிக்கும் என்று ஆதியாகமம் 3:18 நமக்குச் சொல்கிறது. ஆதாமின் கிளர்ச்சியின் அடையாளம் இதோ, தனது ஆட்சியின் விளைவாக அவன் உரிமை கோரக்கூடிய ஒரு புதிய காரியம். இது ஒரு சரியான பொருத்தம். முள்ளைப் போலவே, மனிதகுலத்தின் சுயாதீன ஆட்சியும்—நம்முடைய சொந்த இருதயங்களின் சுயாதீன ஆட்சியும்—வலி, வேதனை மற்றும் வீணான ஒரு தொடர்ச்சியான வரலாற்றை உருவாக்கியுள்ளது. இத்தகைய ஆட்சியானது அது உருவாக்கிய கிரீடத்தைப் போலவே தகுதியுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதுதான் முட்களின் கதை என்றால், இயேசு கிறிஸ்து அதை ஒரு கிரீடமாக அணிந்தது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? ஏனெனில் இங்கே மாம்சமான தேவகுமாரன், முழு தேவனுமாக முழு மனிதனுமாக, தம்முடைய தெய்வீகத்தில் உலகத்தைப் படைத்தவராக, தம்முடைய மனிதத்துவத்தில் பாவமில்லாதவராக நின்று கொண்டிருக்கிறார்; எனவே இத்தகைய சபிக்கப்பட்ட கிரீடத்திற்கு அவர் எவ்வகையிலும் தகுதியற்றவர்! அவருடைய அரியணைதான் ஆதாமால் தாக்கப்பட்டது; அவருடைய வார்த்தைதான் ஏவாளால் சந்தேகிக்கப்பட்டது. அவருடைய வாய்தான் சாபத்தைப் பேசியது. இப்போது அவர் அதன் அடையாளத்தை அணிவதும், அதைவிட மோசமாக, அதற்கான மரணதண்டனையை அனுபவிப்பதும் எப்படிப் பொருத்தமாக இருக்கும்?
அன்பினிமித்தம்
அன்பைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அன்பினால், முட்களின் கதை சிலுவையில் முடிய வேண்டும் என்று தேவன் தீர்மானித்தார். பிதாவானவர் சாபத்தைப் பேசியபோதே, தம்முடைய அளப்பரிய கிருபையினாலும் இரக்கத்தினாலும், அந்தச் சாபத்தைத் தாமே ஏற்றுக் கொள்ளும்படி தம்முடைய குமாரனை அனுப்ப ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அவர் நிலத்திலிருந்து முட்களை முளைக்கச் செய்தபோதே, குமாரன் அந்த முட்களையே தன் நெற்றியில் சூடிக் கொள்ள ஏற்கனவே தீர்மானித்திருந்தார்.
எனவே காலம் நிறைவேறினபோது, தேவகுமாரன் வாடாத கிரீடமாகிய தம்முடைய பரலோக மகிமையை ஒதுக்கிவைத்துவிட்டு, மாம்சமானார். பின்னர், அகில உலகத்தின் உண்மையான, ஒரே ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய கிரீடத்தைச் சூடிக்கொண்டு, ஆதாமிடமிருந்து வந்த நீங்களும் நானும் மற்ற அனைத்து போலி ராஜாக்களும் பெறத் தகுதியான தேவனுடைய உக்கிரத்தை அனுபவித்தார்.
அந்தக் கிரீடத்தைச் சூடி, அதற்கான மரண வேதனையை அனுபவித்ததன் மூலம், இயேசு முட்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். தங்களது கிளர்ச்சிக்காக மனந்திரும்பி, அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், இயேசு நமது பதிலாளியாகச் பாடுபட்டு நாம் பெற வேண்டிய தண்டனையைச் செலுத்தியது மட்டுமன்றி, நமது ராஜாவாகவும் ஆட்சி செய்து, பாவத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டு, முட்கள் வளராத, நெற்றிகள் குத்தப்படாத ஒரு புதிய படைப்பாகிய தம்முடைய மகிமையான ராஜ்யத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றுள்ளார். அந்த ராஜ்யத்தில், நாமாக உருவாக்கிய கிரீடங்களை அல்ல, மாறாக அவருடைய நீதியின் கிரீடங்களை நாம் சூடிக்கொள்வோம்; அவற்றை உரியவரின் பாதங்களில் நாம் மகிழ்ச்சியோடு தூக்கி எறிவோம். ஏனெனில், “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு, மரணத்தை உபத்திரவித்தினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட இயேசுவை” அப்போது நாம் காண்போம் (எபிரெயர் 2:9).
ஆசிரியர்: மைக்கேல் லாரன்ஸ்
மைக்கேல் லாரன்ஸ் என்பவர் ஒரிகான், போர்ட்லேண்டில் உள்ள ஹின்சன் பாப்டிஸ்ட் திருச்சபையின் (Hinson Baptist Church) மூத்த போதகர் ஆவர்.